,d;iwa  mjpcr;r jkpo;r; r%ff; nfhjpepiyahfj; Jyq;FtJ jkpo;j; NjrpaKk; mjd; mbikr; NrtfKNk...J}!!!

முகப்பு

   

நாவினால் சுட்ட வடு 

ஆறும்.

தீயினால் சுட்ட வடு 

ஆறும்.
                       

நாயைப் போல் தெருத்தெருவாய்
இழுத்து வந்து சுட்ட வடுவும் 

ஆறும்

உரித்து உப்புத் தடவி காயவிட்ட தோல்போல் 

ஆறாது 

சந்ததியினால்... 
சாதியினால் ... சுட்ட 

' வடு'
         

 

jypj; mwpf;if
jPHkhdq;fs;
khehl;Lf; fl;Lius;
NeHfhzy;
khehL
fpof;fpd; RaepHzak;

 

 

 

Declaration

Resolution

                   

 

 

                                                                                                                                                 

 

தலைவர் அவர்களே, அ மார்க்ஸ் அவர்களே, ஆதவன் அவர்களே மாநாட்டுப் பிரதிநிதிகளே மற்றும் தோழர்களே, நண்பர்களே அனைவர்க்கும் எனது வணக்கங்கள்!

பாரிசில் தலித் மாநாடு கூட்டப்பட்ட சில மாதங்களின் பின்னர் இன்று லண்டனில் கூட்டப்படும் இந்த மாநாடு மேலும் பல விடயங்களை ஆய்வுக்குள்ளாக்கிக் காத்திரமான திர்மானங்களை வந்தடையும் என எதிர்பார்க்கிறேன்.                                                   

புலம்பெயர்ந்த நாடுகளுக்கு இளம் தலைமுறையினர் மட்டும் வந்தபோது                                 சாதியப் பிரச்சினை அதிகம்                                              இருந்ததில்லை. குடும்பத்தை வரவழைத்துக் கொண்ட பின்னர் குறிப்பாக பழைய தலைமுறையினரை அழைத்து நிரந்தர குடீயேற்றத்திற்கு உள்ளாக்கிய போது யாழ்ப்பாண மண்ணிலேயே காலங்கடந்ததாகிக் கைவிடப்பட்டுக் கொண்டிருந்த சடங்கு சம்பிரதாயங்கள் எல்லாம் மீளுயிர்ப்புப் பெறத் தொடங்கின. அவற்றோடு தவர்க்கவியலாமல் ஒட்டிப் பிறந்து வளர்ந்த சாதிய இழிவுகளும் வெளிப்பட்டன.

இத்தகைய சூழலில் சாதியத்தை தகர்ப்பதற்காக முயற்சிக்கும் இந்த இரண்டாவது தலித் மாநாடு தனது பாணியில் கணிசமான வெற்றியை எட்டும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.

இந்த மாநாட்டுக்கு அதன் ஏற்பாட்டாளர்களால் நான் அழைக்கப்பட்டிருந்தமையை எனக்கான பெரும் கௌரவமாகக் கருதுகிறேன். எனக்கு இருந்த தனிப்பட்ட தடைகளினால் இங்கு கலந்தகொள்ள முடியாமற் போனமையை என் வாழ்நாளில் கண்ட மிகப்பெரும் ஒரு இழப்பாக நான் கருதுகிறேன். சமூகமளிக்க முடியாத எனது இக்கட்டான நிலையை ஏற்று அனைவரும் என்னை மன்னிப்பீர்கள் என எதிர்பார்க்கிறேன்.

இந்த மாநாடு அனைத்து வகைகளிலும் சிறப்புற எனது வாழ்த்துக்கள்.

அன்புடன் ந இரவீந்திரன்

(ந இரவீந்திரன் லண்டன் தலித் மாநாட்டில் கலந்துகொள்ள முடியாமற் போனமையினால் அவருடைய உரையை மூன்றாவது மனிதன் சஞ்சிகையின் ஆசிரியர் பௌசர் மாநாட்டில் வாசித்தார்.)

வட்டுக்கோட்டை மாநாட்டின் பின்னரும், தமிழ்த் தேசியப் போராட்டம் கூர்மைப்பட்டும் மூன்று தசாப்தங்கள் ஓடிவிட்டன. முன்னதாகச் சாதியத் தகர்ப்புப் போராட்டம் யாழ்ப்பாணத்தை உலுக்கியெடுத்தபோது அது முழுச் சாதியச் சமூகங்களிலும் காணமுடியாதிருந்த பல படிப்பினைகளை வழங்கியிருந்தது. எங்கும் கண்டிருக்காத வகையிலே அனைத்துச் சாதியினரும் ஐக்கியப்பட்டுச் சாதியத் தகர்வுக்காக அப்போது போராடியிருந்தார்கள். விரல்விட்டு எண்ணத்தக்க சாதிய வெறியர்கள் தனிமைப்படுத்தப்பட்டுத் தாக்கப்பட்டார்கள். சாதியச் சமூகமுறைமை தகர்ப்புக்கு உள்ளாக வேண்டிய இலக்காக இருந்ததேயன்றி எந்தவொரு தனிச் சாதியும் எதிரியாகக் கருதப்படவில்லை. சாத்தியப்பட்ட சகல சக்திகளும் போராட்ட அணியில் ஐக்கியப்படுத்தப்பட்டார்கள், அல்லது ஆதரவாளர்களாக்கப்பட்டார்கள். தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கம் இவற்றை மிகச் சிறப்பாக முன்னெடுத்தது.

அது பண்ணையடிமைத் தனத்தைத் தகர்கும் தேசியத்தின் ஒரு பணி. ஆயினும் தமிழ்த்தேசியம் அதற்கு எதிராகவே செயற்பட்டது. சிங்களப் பேரினவாத ஒடுக்குமுறை முனைப்புற்றபோது, அதை எதிர்த்த தமிழ்த்தேசியத்தை முன்னர் தலித் விடுதலைப்போராட்டத்தை ஆதரித்தசக்திகளும் ஏற்க நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். ஆரம்பத்தில் பல்வேறு இயக்கங்கள் வாயிலாக ஈழத்தமிழர்களில் மிகப்பெரும்பான்மையினர் தமிழ்த் தேசிய எழுச்சியில் பங்கெடுத்துக் கொண்டனர்.

ஆயினும் அந்தத் தமிழ்த்தேசியத்தின் இயக்குசக்தியாயும், தீர்மானிக்கும் சூத்திரதாரியாயும், தலைமைப் பிரதிநிதியாயும் இருந்த யாழ் வெள்ளாளத் தேசியம் தன்னளவில் கொண்டிருக்கும் பண்பு பிளவுபடுத்தலும் அதனைப் பயன்படுத்தி ஆதிக்கம் செலுத்துவதும் என்கிற காரணத்தால் அனைத்து சக்திகளும் தொடர்ந்து ஐக்கியப்பட்டுப் போராட முடியவில்லை. யாழ் வெள்ளாளத் தேசியத்தை முழுமையாகத் திருப்திப்படுத்தவல்ல ஏதோ ஒரு இயக்கம் ஏனையவற்றைத் துரத்தியாக வேண்டிய நிர்ப்பந்தம் இருந்தது. அது நடந்தது.

வர்க்கப் பிளவு முழுமையாக நடந்த ஐரோப்பாவில் தேசியம் பெற்ற வடிவத்தை இலங்கையிலும் இந்தியாவிலும் பெறமுடியாது. சாதியப் பிளவுடைய எமது சமூகங்களில் இரண்டாயிரம் வருடங்களாக வர்க்கச் சமூக மாற்றங்களுடாகவும் சாதிகள் நீடித்து நிலைபெற்று வருகின்றன. தேசியம் அனைத்து சக்திகளையும் ஐக்கியப்படுத்தும் வலுவை இழக்கும்போது சாதிக்குழுக்கள் தேசிய உணர்வு சார்ந்து தமக்குள் வலுவான ஐக்கியத்தைக் கொள்வதும் ஏனைய சாதிகளில் இருந்து விலகலை ஏற்படுத்துவதும் நிதர்சனம். ஒவ்வொரு சாதித் தேசியங்களது கூட்டிணைவாகவே எமது தேசியம் கட்டமைக்கப்பட்டுள்ளது. பல்வேறு வர்க்கங்களை தேசியத்துள் ஒருங்கிணைப்பதில் இருந்து இது வேறுபட்ட பண்புடையது.

ஈழத் தமிழ்த் தேசியம் ஆதிக்கக் குணாம்சமுடைய யாழ் வெள்ளாளத் தேசியத்தின் நலன்களை முதன்மையாக நிறைவு செய்வது, அவற்றுக்கு உட்பட்டுச் செயற்படுவதாக ஏனைய சாதித் தேசியங்கள் அமையும். அவை ஒருமுகப்படும் தமிழினத் தேசியமாக இருந்தது. இது பொது எதிரியான பௌத்த சிங்களப் பேரினவாதத்துக்கு எதிரானது. அந்தவகையில் பொது எதிரிக்கு எதிராகப் போராடுகின்ற போதிலும் தனது இனத்தினுள் ஆதிக்கம் செலுத்துவதாக யாழ் வெள்ளாளத் தேசியம் அமைகின்றது. அதனுள் அடங்கும் ஏனைய ஒவ்வொரு சாதித் தேசியங்களிலிருந்து இவ்வாறாக யாழ் வெள்ளாளத் தேசியம் தனித்துச் செயற்படும்.

இதுபோலத் தனித்து இயங்கும் மற்றொன்றாகத் தலித் தேசியம் உள்ளது. ஆரம்பத்தில் தனித்தனியாக ஒடுக்கப்பட்ட சாதியமைப்புகள் செயற்பட்டு, “ சிறுபான்மைத் தமிழர் மகாசபை” எனும் ஒரு அமைப்பாக வடிவம் கொண்டபோது தலித் தேசியம் தெளிவான அரசியல் மார்க்கத்தைக் கட்டமைத்துக் கொண்டது. அது தீர்க்கமான போராட்ட வடிவங்களைக் கையாண்டு பண்ணையடிமைத்தனத்தையும் அதன் எச்சசொச்சங்களையும் தகர்க்கும் பணியைக் கையேற்றபோது “ தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கம்” தோற்றம் பெற்றது. தலித் தேசியப் பணியேயாயினும், இங்கு ஆக்கிரமிப்பு அபிலாஷைகள் இல்லாமலே அனைத்து சாதியினரும் ஐக்கியப்பட்டுப் போராடுவது சாத்தியமானது.

இவ்வகையில், பல நூறு வருடங்களாய் ஒடுக்கப்பட்டு வந்த மக்களது தேசிய எழுச்சி ஒரு திசையில் முன்னெடுக்கப்படும்போது, வெளியாரிலிருந்து விடுதலை பெறுவதை மட்டும் குறிக்கோளாக உடைய ஒடுக்கும் தேசியப் பண்புடைய மற்றொருவகைத் தேசியம் சாத்தியப்படும் யதார்த்தம் எமக்குரியதாக உள்ளது. அதேவேளை இன்று பௌத்த சிங்களப் பேரினவாதத்தின் கோரமான ஒடுக்குமுறை தமிழர் அனைவரையும் ஏதோவொரு வகையில் ஐக்கியப்படுத்துவதாக உள்ளதையும் காணத்தவறக்கூடாது. மட்டுமன்றி, யாழ் வெள்ளாளத் தேசியம் என்பதை இனங்காண முடியாத வகையில் போராட்டத்தை வழிநடத்தும் அமைப்பு இன்று கட்டமைக்கப்பட்டுள்ளதையும் காண வேண்டும்.

தலைமையின் சாதி வேறாக இருப்பதும், களத்தில் போராடும் சக்தியாக தலித் இளைஞர்களும் யுவதிகளுமே அதிகமாக இருப்பதும் சார்ந்து ஒடுக்குமுறைத் தேசியம் என்ற வடிவம் இழக்கப்பட்டுள்ளதாகக் கருதமுடியாது. தலைமையின் சாதிவடிவம் யாழ் வெள்ளாளத் தேசியத்திலிருந்து வேறானதல்ல. பிராமணர்களும் வெள்ளாளர்களும் மட்டுமே சிவன் கோயில் கட்ட முடியும் என்ற ஆகம அனுமதியைத் தமக்குமானதாய் முன்னரே ஆக்கிவிட்டவர்களாய் இன்றைய தலைமைச்சக்தி உள்ளது. அவ்வாறு மற்றொரு வெள்ளாளர் எனும் வடிவம் கொண்டவர்கள் தமது யாழ் வெள்ளாளத் தேசியத்தின் தலைமையில் இணைவதில் ஆதிக்க சக்திகளுக்குச் சலனம் எதுவும் இல்லை. அதைவிடவும் இந்தப் போராட்ட வடிவங்கள் யாழ் வெள்ளாளத் தேசிய நலனுக்குப் பாதகமாயில்லை என்பதாலேயே இன்றைய தலைமை ஆதிக்க சக்திகளால் போசிக்கப்படுகின்றது.

இன்றைய போராட்டத்தின் களத்தில் போராளிகளாக ஏராளமான தலித் இளைஞர்கள், யுவதிகள் உள்ளனர் என்பது தொடர்பாக ஒரு அனுபவத்தை இங்கே எடுத்துக் காட்ட முடியும். இந்த வருடத்தின் தொடக்கத்தில் கொழும்பில், இருநாட்களுக்கான பெண்ணியக் கருத்தரங்கு ஒன்று இடம்பெற்றிருந்தது. தேசிய விடுதலைப் போர்க்களத்தினுள் பெண்ணியப் பிரச்சினை தொடர்பாக அந்தக் கருத்தரங்கு ஏற்பாட்டாளரான பெண்ணியச் சிந்தனையாளர் முன்வைத்த கருத்து ஒன்று இங்கே எமது கவனத்துக்கும் உரியதாயுள்ளது. அவர் சமாதான காலத்தில் தனது பெண்ணிய அமைப்புச் சார்ந்து கிளிநொச்சியில் பெண் போராளிகளுடன் தொடர்பாடியிருக்கிறார். அவர்கள் அவர் மூலமாகப் பல காத்திரமான நூல்களைப் பெற்றதுடன் அவை தொடர்பான கருத்தாடல்களையும் செய்திருக்கிறார்கள்.

அத்தகைய ஒரு சந்திப்பின்போது அவர்களிடம் இந்தப் பெண்ணியவாதி அரசியல் செல்நெறிகள் மற்றும் தீர்வுகள் பற்றிய அவர்களது அபிப்பிராயத்தைக் கேட்டுள்ளார். மிகப்பொறுப்பாகக் கதைத்தவர்கள் கூட, அவை தலைவராலேயே தீர்மானிக்கப்படுவன, அவரால் வெற்றியை நிச்சயமாக ஈட்டித்தர முடியும் என்பதாகத் தான் கூறியிருக்கிறார்கள். சுயமான புரிதலுக்கும் அரசியல் தெளிவுக்கும் இப்போதும் அங்கே இடமில்லை. அந்தப் பெண்ணியவாதியின் அக்கறை, அந்தப் பெண்போராளிகளிடம் பெண்விடுதலை சார்ந்த நடைமுறைச் சாத்தியமான செயற்பாட்டுக்கான வெளி அங்கு இல்லை என்பதைக் காட்டுவதுதான்.

இன்றைய எமது சமூகத்தில் பெண் போராளிகளுக்கு ஒரு மரியாதை இருப்பதான தோற்றம் உண்டு. அவ்வாறு உண்மையான மரியாதை எதுவும் இல்லை என்பதைப் பெண் போராளிகளே உணர்வதாக அவர்களால் படைக்கப்பட்ட ஆக்கங்கள் வெளிப்படுத்தி நிற்கின்றன. மேலே குறித்த பெண்ணியக் கருத்தரங்கில் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் இதனை எடுத்துக்காட்டின. ஒரு பெண் போராளியின் படைப்பிலிருந்து காட்டப்பட்ட உதாரணமொன்றைப் பார்க்கலாம். விடுப்புப்பெற்றுத் தனது வீட்டுக்கு வருகிறாhள் ஒரு பெண்பேராளி. அவள் வருவதை அறிந்த தாயார் அவளது தங்கைகளை வேறு உறவினர் வீட்டுக்கு ஏற்கனவே அனுப்பி விட்டாள். “அவர்கள் எங்கே” என்று கேட்டபோது, “அவர்கள் குமருகள் பிள்ளை” என்கிறார் தாய். திகைத்துப்போன அந்தப் பெண்போராளி, “நானும் குமர்ப்பிள்ளைதான் அம்மா” என்கிறாள்.

அவர்கள் போராளிகள் என்கிறவகையில் வேறான சாதிகளாகப் பார்க்கப்படுகிறார்கள். அந்தத்தாயின் நிலைப்பாட்டில் ஆச்சரியப்பட எதுவுமில்லை. வேறான ஒரு சாதிக்குள் ஒரு மகளை இழந்துவிட்டவள், ஏனைய பிள்ளைகளையும் இழப்பதற்கு விரும்பவில்லை. சொந்தத்தாய் பெண் போராளியைப் பார்ப்பதில் வேறுபடுகிறபோது சமூகத்தின் பார்வை இரண்டகத்தன்மையாகியுள்ளதைக் கண்டு ஆச்சரியப்பட வேண்டியதில்லை. மக்களை விட்டுத் தொலைதூரம் பிரிக்கப்பட்டே போராளிகள் உள்ளனர். மக்களைப் பிரிந்துள்ள இந்தப் போராளிப் படிமம் இழக்கப்பட்டு மீண்டும் சமூகப் பிரசையாக அவர் வரும்போது சமூகத்தின் இயற்கைக்குள் தன்னை அமிழ்த்த வேண்டுமேயன்றி, தான் விரும்பும் மாற்றங்களை அங்கே காண முடியாது. பல்வேறு வடிவங்களில் பெண் ஒடுக்கு முறைகளைத் தொடரும் சமூகத்தில் கருவிகளைக் கைவிட்ட முன்னாள் பெண்போராளியும் பொருத்தப்பாடு காண முடியுமேயன்றிச் சமூகப் போராளியாகிப் பெண் விடுதலைக்குரலை எழுப்பி எதுவும் ஆகாது. தேசிய விடுதலைப் போராட்டம் பெண் விடுதலைக்கான மாற்றங்களைப் பெரிதாக ஏற்படுத்திவிடவில்லை.

பெண்விடுதலை உணர்வு தொடர்பாகச் சாதித்ததை விடவும் சற்று அதிகமாகச் சாதியத் தகர்வு சாத்தியப்பட்டதான தோற்றம் ஒன்று உண்டு. சீதனம் வாங்குவதும் கொடுப்பதும் தண்டனைக்குரிய குற்றம் என்ற சட்டம் போலவே சாதி பேசிப் பேதங்கள் வளர்ப்பதும் தடுக்கப்பட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. சீதனத்தைச் சட்டத்தில் மாட்டுப்படாமல் கொடுக்கவும் வாங்கவும் செய்யத் தெரிந்தவர்கள் அந்தளவுக்குச் சாதிபேதச் செயற்பாடுகளுக்குள் செல்வதில்லை. ஓரளவுக்குச் சாதிய சழக்குகள் உணர்வுபூர்வமாகவே கைவிடப்பட்டதான தோற்றம் உண்டு.

இது மேலோட்டமானது. உள்ளுரச் சாதியக் காழ்ப்புகள் நீறுபூத்த நெருப்பாக இருந்துகொண்டுள்ளது. கண்டநிண்ட சாதிக்காரனும் போராளியாக இருப்பதால் எதையும் கதைக்கப்போய் மாட்டிக்கொள்ளக் கூடாது என்ற எச்சரிக்கை உணர்வு, வெளிப்பார்வையில் சாதியப் பார்வைகள் குறைந்துள்ளதான தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாகவே இருவர் வெளிப்படையாக இந்த விடயங்களைக் கதைக்கும்போது மூன்றாவது ஒருவர் பிரவேசித்துவிட்டால் நிறுத்திக் கதையை மாற்றுவதற்கு எம்மவர் நன்றாகவே பயிற்சி பெற்றிருக்கிறார்கள், அந்த மூன்றாமவருடன் தனித்தனியே முன்னவர் இருவரும் அதே விடயத்தைக் கதைத்தவர்களாயினும் இதுதான் நிலை - மூவர் ஒரு பாதையில் போகக்கூடாது!

இவ்வாறு கதை மாற்றம் பெறும் ஒரு பேசுபொருள் சாதி பற்றியது. குறிப்பாகத் தோல்வி பற்றிய சந்தர்ப்பங்களிலும், தேவையற்ற விடயங்கள் செய்யப்படுவதாகக் காணும்போதும் கண்டநிண்ட சாதிகள் செய்வதான புறுபுறுப்பு இடம்பெறும். அதேயாட்கள் வெற்றிகளை அடுக்கியபோது “ எங்கடை பொடியளாக” இருந்தவர்கள் தவறுகளின்போது கண்டநிண்ட சாதிகளாய்க் காணப்படுகிறார்கள். “எங்கடை பொடியள்” என்பதும், யாழ் வெள்ளாளத் தேசிய நிறைவேற்றத்துக்கான நயினாரின் அடியாட்கள் எனும் பொருளில் பார்க்கப்படுவதை அடியொற்றியதுதான்.

வெறும் சட்டம் போட்டுச் சாதிபேதம் தகர்க்கப்படக் கூடியதல்ல. தமிழ்த் தேசியத்தின் சாராம்சம் வெள்ளாளத் தேசியமாக இருப்பதைத் தகர்ப்பதற்கான அடிப்படை மாற்றங்கள் கொள்கை மார்க்கத்திலும் நடைமுறையிலும் செய்யப்பட்டிருக்க வேண்டும். அது செய்யப்படவில்லை. இல்லாத பட்சத்தில் வெளிவெளியாகச் சாதிபற்றிப் பேசாததனாலேயே பெரிதாக ஏதோ மாற்றம் ஏற்பட்டுவிட்டதாக மயங்க வேண்டியதில்லை.

ஈழத்தமிழ்த் தேசியத்தின் வடிவம் மாறாதபோதிலும் இங்கு சமூக சக்திகளிடையேயான சமநிலையில் சில மாற்றங்கள் இடம்பெற்று வருவதனை அவதானிக்க முடிகின்றது. இது தொடர்பான கருத்துக்களைப் பலதரப்பட்டவர்களுடனான பேட்டிகாணல் ஊடாகப் பெற்றுக்கொண்டேன். தவிர்க்க முடியாத காரணங்களால் கருத்துக்குரியவர்களது பெயர்களையும் யாரெல்லாம் பேட்டிகாணப்பட்டார்கள் என்பதையும் முன்வைக்க முடியவில்லை. குறிப்பாகச் சிறுபான்மைத் தமிழர் மகாசபை, தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கம் ஆகியவற்றில் முன்னணியில் இயங்கிய தலித் விடுதலைச் சமூகப் போராளிகளது கருத்துக்கள் இங்கு முன்னுரிமைப்படுத்தி வெளிப்படுத்தப்படுகின்றன.

பிரதான இன்றைய இனத்தேசிய விடுதலைப் போராட்டத்தின் களத்தில் தலித் போராளிகள் பலர் உள்ளமையினால் ஏற்படும் அளவு அதிகரிப்பு உருவாக்கிவரும் மாற்றங்கள் கவனிப்புக்குரியது. முழுமையான சமூகத் தளத்திலும் தலித் பிரிவினர் பல வகைகளில் ஆளுமை விருத்தியைக் கண்டுவருகின்றனர்.

சாதிய ஆதிக்கத்துடன் வெள்ளாளத் தேசியத்தை முன்வைத்த பிரிவினரில் பெரும்பான்மையோர் புலம்பெயர்ந்துவிட்டனர்(இவர்களே கனடாவிலும், ஐரோப்பாவிலும், அவுஸ்திரேலியாவிலும் சாதியவாதம் மேலோங்கக் காரணமாகியுள்ளனர்).

இங்கே பௌத்த சிங்களப் பேரினவாதத்துக்கு முகங்கொடுப்பவர்களில் தலித் மக்கள் முன்னிலை வகிக்கின்றனர். இவ்வகையில் இதுவரை ஏற்பட்டுள்ளது அளவு மாற்றமேயன்றிக் குணாம்ச மாற்றம் அல்ல (யாழ் வெள்ளாளத் தேசியமே தலைமை சக்தி எனும் பண்பில் மாற்றம் இல்லை). எதிர்காலத்தில் குணாம்ச மாற்றத்தை ஏற்படுத்தத்தக்க மாற்றம் சாத்தியப்பட இடம் ஏற்படுத்தவல்லதாகச் சமூகத் தளமாற்றம் உருவாகிவருவது கவனிப்புக்குரியது.

இப்போது போராட்டத்தலைமை தோல்வியைத் தழுவும் பட்சத்தில் ஈழத் தமிழினத் தேசியவாதிகள் சர்வசாதாரணமாக, இதெல்லாம் அந்தச்சாதி இழைத்த தவறு எனப் பழியைப் போடுவார்கள். இவ்வாறு பழியைப் போட உள்ளவர்களது பிற்போக்குத்தனமான ஆதிக்கத் தேசியவாதத்தை முறியடித்து மக்கள் நலன் சார்ந்த அம்சங்களை முன்னிலைக்குக் கொண்டுவராமல் இருந்ததன் விளைவு இது. இந்தப் படிப்பினைகளுடன் முந்திய சாதியத் தகர்ப்புப் போராட்ட அனுபவங்களையும் உள்வாங்கும் புதிய தலித் போராளிகள் எதிர்காலத்துக்கான நம்பிக்கைகளைத் தருவர்.

இதனைக் கவனத்திற் கொண்டு தேசிய இனப்பிரச்சினைத் தீர்வில் முஸ்லிம் மக்களை, கிழக்குப் பிராந்தியத்தை, மலையக மக்களை, பெண்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவோர் பேச்சுவார்த்தைகளில் இடம்பெறுவதைப் போல, தலித் பிரதிநிதிகளும் இடம்பெறுதல் அவசியம். ஐரோப்பாவிலுள்ள தலித் சிந்தனையாளர்கள் முன்வைக்கும் இந்தக் கோரிக்கை இங்குள்ள தலித் போராளிகளாலும் (அவர்கள் தங்களை சமூக விடுதலைப் போராளிகளாகவே அடையாளப்படுத்த விரும்புகின்றனர், தலித் விடுதலை அதன் பிரிக்க முடியாத அம்சம் என்ற காரணத்தாலும், இந்தக் கட்டுரையின் பாடுபொருள் காரணமாகவும் இவ்வாறு நான் குறிப்பிடுவதனை அவர்கள் மன்னிப்பார்கள்) வரவேற்கப்படுகின்றது. ஆயினும் அதனை முதன்மைப்படுத்தி எவரும் இங்கு அந்தக் கோரிக்கையை இயக்க மயப்படுத்தவில்லை. அது கவனிக்கப்படாமலே உள்ளது.

ஐரோப்பியத் தலித் சிந்தனையாளர்களின் இட ஒதுக்கீடு குறித்த கோரிக்கை இங்கு ஏற்றுக் கொள்ளப்படவில்லை. சென்ற நூற்றாண்டின் முப்பதாம் ஆண்டுகளில் இலவசக் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து அதனைப் பெறுவதற்கும், பாடசாலைகளில் பாரபட்சம் காட்டப்படுவதனை முறியடிப்பதற்கும் பல போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. அதன் வாயிலாக இன்று வேறுபடுத்த முடியாத அளவில் தலித் மாணவர்கள் முன்னேறியுள்ளார்கள் என்ற அபிப்பிராயம் உண்டு. அவ்வாறே வேலை வாய்ப்பிலும் சாதிப்புறக்கணிப்பு இந்தியாவில் எதிர்நோக்கப்படுவதுபோல இங்கு இல்லை. அந்த வகையில் இட ஒதுக்கீட்டுக்கான அவசியம் ஏற்படவில்லை.

சாதியத் தகர்ப்புப் போராட்டம் இடம்பெற்றபோதே தலித் சிறப்புரிமைகள் குறித்த கோரிக்கைகளை ஏன் முன்வைக்கவில்லை என்ற கேள்விக்கு, நாங்கள் சமூக விடுதலைக்காகப் போராடி அவற்றை வென்றெடுத்தோம், தொடர்ந்து ஆட்சியதிகாரத்தை வென்றெடுப்போம் என்ற இலக்குத்தான் இருந்ததேயன்றிச் சலுகைகள் எங்களுக்கு அவசியப்படவில்லை எனும் பதில் கிடைத்தது. இந்தியச் சூழலில் அவற்றுக்கான தேவை இருப்பதை அவர்கள் மறுக்கவில்லை. இடைச்சாதியினர் சாதியொடுக்கு முறையில் முனைப்புறும்போது மாயாவதி பிராமணர்களுடன் ஐக்கியப்பட்டுத் தலித் விடுதலைக்குரலை முன்வைப்பதும் தவிர்க்கவியலாத வரலாற்று நிர்ப்பந்தம் எனும் அபிப்பிராயமும் முன்வைக்கப்பட்டது.

தமிழகத்தில் பிராமணியத்துக்கு எதிராகப் போராடிய வெள்ளாளர்கள் இட ஒதுக்கீடு போன்றவற்றை தமது நலன்சார்ந்தே முன்வைத்தனர். அவர்கள் அரசியல் அதிகாரத்தை வென்ற பின்னர் தலித் மக்களை ஒடுக்குவதில் வன்மத்துடன் செயற்படுகின்றனர். அவர்களுடன் யுத்தப் பரம்பரையாய் இருந்த ஏனைய இடைச்சாதியினரும் இணைந்து இன்று தலித் மக்களை மோசமாக ஒடுக்கி வருகின்றனர். இங்கு சாதியத் தகர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்ட காலம் இந்த அம்சத்துடன் இணைத்து நினைவுறுத்தப்பட்டது. சைவசித்தாந்த ஆன்மீகத் தலைமை, கல்வி - அரசதிகாரப் பாரம்பரியம், யுத்தப் பரம்பரைக் குணாம்சம் என்பவற்றையுடைய வெள்ளாளச் சாதியவாதம் இங்கு வன்மத்துடன் சாதிய ஒடுக்குமுறையை முன்னெடுத்திருந்தது. பிராமணப் புனிதம் பெறாத தாழ்வு மனப்பான்மையும் இந்த ஒடுக்குமுறையில் பங்கு வகித்துள்ளது.

அதனை முறியடிக்கும் வகையில் பெரும்பாலான வெள்ளாளர்களையும் ஐக்கியப்படுத்தி முன்னெடுக்கப்பட்டது சாதியத் தகர்ப்புப் போராட்டம், இப்போது யாழ் வெள்ளாளத் தேசியவாதம் முனைப்பாகி ஒரு உச்சநிலை அடைந்து இன்று வீழ்ச்சிக் கட்டத்தை அடைந்த கட்டத்தில் தலித் பிரச்சினை அணுகப்படுகின்றது. கூர்மையான போராட்டம் நிகழ்ந்து கொண்டிருந்தபோது சாதி அடையாளங் கவனிக்கப்படாமல் மேற்கொள்ளப்பட்ட பல நடவடிக்கைகள் சமாதான காலத்தில் எதிர்நோக்கிய நெருக்கடிகள் இங்கு கவனத்திற் கொள்ளப்படுதல் அவசியம். குறிப்பாகப் பல காதல் திருமணங்கள் சாதியைக் கவனிக்காது செய்யப்பட்டவை, சமாதான காலத்தில் குடும்ப அளவில் பழக முற்பட்டபோது திருமண முறிவுவரை சென்றன. அந்தவகையில் நடைமுறையில் இளந்தலைமுறை சாதியத்தைக் கடக்க முனைந்தபோதிலும் பழைய தலைமுறையும், சாத்திர சம்பிரதாயங்களும் சாதியத் தகர்ப்புக்குத் தடையாக இருப்பதனை அவதானிக்க முடிகின்றது.

இதுவும் எதிர்காலத் தலித் இயக்கம் கவனத்திற் கொள்ள வேண்டிய ஒரு அம்சம். யாழ் வெள்ளாளத் தேசியத்தின் வீழ்ச்சியைப் பிற சாதியினர் தலைமீது சுமத்த எடுக்கும் முயற்சி, பழைமைச் சகதியிலான முடக்கம் என்பவற்றுக்கு எதிரான அரசியல் பண்பாட்டு இயக்கங்கள் பூரணத்துவப் பண்புகளுடன் முன்னெடுக்கப்படுதல் அவசியம். தோல்வியை வெற்றியாக மாற்றத்தக்க புதிய அணிதிரட்டல்களைச் சாத்தியமான வடிவங்கள் அனைத்தினூடாகவும் முன்னெடுக்கும்போது மட்டுமே தோல்விவாதத்தில் மூழ்கிச் சிதைந்து போகாமல் மீள இடம் ஏற்படும்.

முன்னதாக முதற்பகுதியில் நாம் விவாதித்திருந்த விடயங்களில் இருந்து பிரதானமான மூன்று அம்சங்களைத் தொகுத்து எடுத்துக்கொள்ள முடியும்.

1.0 ஈழத் தமிழினத் தேசிய எழுச்சி எதிர்நோக்கும் நெருக்கடிக்கான அடிப்படைக் காரணம், அது யாழ். வெள்ளாளத் தேசிய நலனுக்கு ஆட்பட்டுச் செயற்பட்டமை.
2.0 தலித் தேசிய எழுச்சி விடுதலை பிளவுபடாதது என்பதை உணர்த்துவது.
3.1 சாதியத் தேசியச் சக்திகளிடையே தலித் தேசியம் யாழ் வெள்ளாளத் தேசியத்துடன் சம பலத்துடன் உள்ளது.
3.2 பிளவுபட்ட தேசிய யதார்த்தத்தில் பிரதான எதிரி லாபமீட்டும் முயற்சியில் ஒன்றுடன் ஒன்றை மோதவிடும் தந்திரோபாயத்தைக் கையாளும்.

இந்த விடயங்களை மேலும் விளங்கிக் கொள்ளும் வகையில் இங்கு நடைமுறையிலுள்ள சில சம்பவங்களை எடுத்துக் காட்டாகப் பார்க்கலாம். இவை குறித்து ஏற்கனவே எல்லோரும் அறிந்திருக்கிறீர்கள். ஆயினும் அவசியம் கருதிச் சுருக்கமாக இங்கு அலசுவோம்.

யாழ்ப்பாண நூலகத்தை ஒரு தலித் தலைவர் திறந்து வைப்பதைத் தடுத்து நிறுத்துவதற்காக, யாழ் மேயராகத் தலித் ஒருவர் இருப்பதை நீடிக்க விடாமற் செய்த சம்பவம். இந்த விடயத்தில் போராட்டத் தலைமையைக் கையகப்படுத்திச் செயற்படும் இயக்கம் வெளிப்படையாகவே சாதியவாதத்துக்கு ஆட்பட்டுள்ளமை தெளிவுபட்டது. சமூக மாற்றச் செயற்பாட்டில் இந்தத் தேசியப் பேராட்டம் சாதகமான திசையில் இல்லை என்பதற்கும், யாழ் வெள்ளாளத் தேசிய மனோபாவத்தைப் பலப்படுத்தும் செயற்பாடுகளே அனுமதிக்கப்படும் என்பதற்கும் யாழ் மேயராகத் தலித் தலைவர் ஒருவர் நீடிக்க முடியாமை எடுத்துக்காட்டாகியுள்ளது.

சாதியத் தகர்ப்புப் போராட்டம் முனைப்படைந்த அறுபதுகளில் எஸ்.ரி.என். நாகரத்தினம், டானியல் போன்ற தலைவர்கள் சமூகத் தலைவர்களாக எழுச்சி பெற்றனர். அவர்கள் பெரும்பான்மையான மக்களால் மதிக்கப்பட்டனர். மாறாக சு.ப.தமிழ்செல்வன் அரசியல் பொறுப்பாளராக இருந்தபோது சாதியவாத சக்திகளின் மனோபாவம் ஒருவகையாக இருந்தது, அவரது மறைவு குறித்துத் தலித் மக்களிடையே கடும் சந்தேகங்கள் எழுப்பப்பட்டுள்ளன.

மூன்று வருடங்களின் முன்னே தென்மராட்சியில் நடைபெற்ற குறுகிய கால நீடிப்பைக் கொண்டிருந்த சாதிக்கலவரம் மேலே நாம் பார்த்த மூன்றாம் பகுதியின் இரண்டு அம்சங்களையும் உணர்த்துகின்றது. அதாவது, சாதிச் சக்திகள் சமபலத்தை எட்டியுள்ளதுடன், சாதியத் தேசிய முரண்களை எப்போதும் எதிரிகள் பயன்படுத்துவர் என்பது.

இந்த மூன்றாவது விடயத்துடன் எமது விவாதத்தை இப்போது தொடர முடியும். அந்தக் கலவரம் பற்றி நினைவுபடுத்துவதற்காகச் சுருக்கமாகச் சம்பவத்தை முன்வைக்கிறேன். உயர்தர வகுப்பு மாணவிகள் கூடியிருந்த ஒரு இடத்தில் ஒரு தலித் சக மாணவன் வருகிறான். அவன் சார்ந்த வெற்றிக்கு விருந்து அவசியம் என்று அந்த மாணவிகள் சொல்கிறார்கள். அவன் ஐஸ்கிறீம்களை வாங்கி எல்லோருக்கும் பரிமாறுகின்றான். ஒரு மாணவிக்குக் கொடுக்க முயற்சித்தபோது, அவள் தனது அண்ணன் வருவதைக் கண்டுவிட்டதால் வாங்காமல் பின்வாங்குகிறாள். அதனை உணராத தலித் மாணவன் அந்த உயர்சாதி மாணவியிடம் வலிந்து ஐஸ்கிறீமைக் கொடுக்கிறான். அண்ணனின் சாதி மனோபாவம், அவனது தங்கை உட்படத் தங்கையுடன் இருந்த சக மாணவிகளின் கோரிக்கையினால் நடந்த விருந்தாக அதனை விளங்கிக் கொள்ள இடமளிக்கவில்லை, தங்கைக்கு ஒரு தலித் வலிந்து ஐஸ்கிறீமைத் திணித்ததாகச் சம்பவத்தைத் திரிவுபடுத