,d;iwa  mjpcr;r jkpo;r; r%ff; nfhjpepiyahfj; Jyq;FtJ jkpo;j; NjrpaKk; mjd; mbikr; NrtfKNk...J}!!!

முகப்பு                                    04/07/2008

   

நாவினால் சுட்ட வடு 

ஆறும்.

தீயினால் சுட்ட வடு 

ஆறும்.
                       

நாயைப் போல் தெருத்தெருவாய்
இழுத்து வந்து சுட்ட வடுவும் 

ஆறும்

உரித்து உப்புத் தடவி காயவிட்ட தோல்போல் 

ஆறாது 

சந்ததியினால்... 
சாதியினால் ... சுட்ட 

' வடு'
         

 

 

 

 

Declaration

Resolution

                   

 

 

 

தோழர் டானியிலின் தணிக்கை செய்யப்பட்ட கட்டுரையும் இன்று எழும் கேள்விகளும்  

-சமுத்திரன்-

இங்கு பிரசுரமாகும் தோழர் டானியலின் கட்டுரை 1979 ல் யாழ்ப்பாணத்தில் தீண்டாமை எதிர்ப்பு வெகுஜன இயக்க மலருக்கென எழுதப்பட்டு அப்போதிருந்த தணிக்கைச் சட்டத்தின் காரணமாக பிரசுரம் தடைசெய்யப் பட்டதால் குறிப்பிட்ட மலரில் பிரசுரமாகவில்லை. இக்கட்டுரையின் ஒரு பிரதி 1982இல் நான் டோக்கியோவில் வாழ்ந்து வந்தபோது யாழில் இருந்துவந்த ஒரு நண்பருக்கூடாக எனக்குக் கிடைத்தது. அன்றிலிருந்து கடந்த 25வருடங்களாக இந்தக் கட்டுரைப் பிரதியும் என்னுடன் பல இட மாற்றங்களை அனுபவித்துள்ளது. எனக்கு ஒரு பிரதியைக் கிடைக்கச் செய்ததுபோல வேறு யாருக்கும் டானியல் இக் கட்டுரையின் பிரதிகளை அனுப்பியிருப்பார். ஆகவே இந்தக் கட்டுரை ஏற்கனவே பிரசுரிக்கப் பட்டிருக்கலாம். அப்படியிருப்பினும் இதனை மீண்டும் பிரசுரிப்பதில் பயனுண்டு என நம்புகிறேன்.

 

இந்தக் கட்டுரையில் யாழ்ப்பாணத்தில் சாதியத்திற்கெதிரான போராட்டங்களின் வரலாற்றுப் பின்னணியைத் தெளிவாக்கி 1960களில் இடம்பெற்ற வெகுஜனப் போராட்டத்தின் முக்கியத்துவம் பற்றி ஆயப்பட்டுள்ளது. இலங்கைத் தமிழ் சமூகங்களில் யாழ்ப்பாணத்திலேயே சாதியமைப்பு மிகவும் இறுக்கமான நிறுவன மயமாக்கலைக் கொண்டிருந்தது. சைவவேளாள உயர் வர்க்கத்தினால் பிராமணிய மயப்படுத்தப்பட்ட யாழ் சமூக அமைப்பில் தீண்டாமையும் சாதிக் கொடுமைகளும் சைவ வேளாளியக் கருத்தியலினாலும் பல்வேறு சடங்குகளினாலும் நியாயப் படுத்தப் பட்டன. இத்தகைய ஒரு சமூக அமைப்பில் சாதியத்திற்கெதிரான போராட்டங்களின்றித் தாழ்த்தப்பட்போர் தமது சுதந்திரத்தை மனித கவுரவத்தைப் பெற முடியாதென்பது அடிப்படை உண்மை. கிறிஸ்துவ பாடசாலைகளின் வருகை யாழ் சமூகத்தில் சாதியத்தை கேள்விக்குள்ளாக்கி எதிர்புக்களைத் தெரிவிக்கும் சமூக இடைவெளிகளை உருவாக்கவதற்கு உதவியது. கிறிஸ்துவ மதமாற்ற நிறுவனத்தினர் தமிழ்ச்சமூக அமைப்பின் அடிப்படைகளையோ, ஆதிக்க சக்திகளையோ நேரடியாகத் தாக்காது தமது செயற்பாடுகளை நடத்தியபோதும், கிறிஸ்துவ பாடசாலைகளும் மதமாற்றமும் ஒருசில தாழ்த்தப்பட்ட சாதியினரின் கல்விக்கும் சமூக நகர்ச்சிக்கும் உதவின. இந்தத் தனிநபர்கள் சாதியத்திற்கெதிராகக் குரல் கொடுத்தனர். நடைமுறைரீதியான செயற்பாடுகளில் ஈடுபட்டனர். இந்தப்போக்கு சென்ற நூற்றாண்டின் முதலாவது தசாப்தத்திலேயே துளிர் விடத் தொடங்கியது. இந்தப் போக்கு தொடர்ந்த வேளை 1920களில் யாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸ் உதயமாகியது. இது காலனித்துவத்திற்கு எதிரான போராட்டத்தில் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வாகும். இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தினாலும், முற்போக்குச் சிந்தனைகளாலும் ஆகர்சிக்கப்பட்ட இந்த இயக்கம் பிரிட்டிஷ் காலனித்துவத்திடமிருந்து பூரண சுதந்திரத்தை வேண்டி நின்ற அதேவேளை, யாழ் தமிழ் சமூகத்தின் சாதி அமைப்பினையும் எதிர்த்துச் செயற்பட்டது.

 

இதைத் தொடர்ந்து 1935இல் உருவான இடதுசாரிக் கட்சியான சமசமாஜக் கட்சியினர் யாழ்ப்பாணத்தில் சாதிய எதிர்ப்பினைத் தொடர்ந்தனர். இடதுசாரிய அரசியலின் வருகை சாதி அமைப்புப் பற்றிய அறிவுரீதியான விமர்சனப் போக்கினையும் வளர்க்க உதவியது. இதே காலகட்டத்தில் சர்வஜன வாக்குரிமையின் வருகை தமிழ் அரசியலில் யாழ் சமூகத்தின் ஏறக்குறைய முப்பது வீதத்தினராய் இருந்த தாழ்த்தப்பட்டோரின் முக்கியத்துவத்தை உணர்த்தியது. 1920களில் யாழ் இளைஞர் காங்கிரசினால் நடைமுறைப் படுத்தப்பட்ட சமபந்தி போசனம் காலப்போக்கில் பாராளுமன்ற அரசியல்வாதிகளால் வாக்குகள் பெறும் ஒரு பிரச்சாரக் கருவியாக்கப் பட்டதையும் காண்கிறோம்.

 

ஆயினும் இந்த வலதுசாரி அரசியல் வாதிகளும் அவர்களின் கட்சிகளும் (தமிழ்க் காங்கிரஸ், தமிழரசுக் கட்சி) சைவ வேளாளியத்தின் அமைப்பு ரீதியான, கருத்தியல் ரீதியான மேலாதிக்கத்தை விமர்சிக்கவோ, எதிர்க்கவோ முன்வரவில்லை. அப்படிச் செய்வது அவர்களின் வர்க்க நலன்களுக்கு வரோதமானது என்பதை அவர்கள் அறியாமலில்லை.

 

இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி 1943இல் சமசமாஜக் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட ஒரு குழுவினரால் தோற்றுவிக்கப்பட்ட பின்னர் சாதிய எதிர்ப்பில் இடதுசாரிகளின் குறிப்பாக கம்யூனிஸ்ட்டுகளின் பங்கு முக்கியத்துவம் பெறுகிறது. படிப்படியாக வெகுஜன அணிதிரட்டலின் அவசியம் மேலும் உணரப் படுகிறது. 1960களில் இது நடைமுறைப் படுத்தப்படுகிறது. இதன் முக்கியத்துவத்தினை டானியல் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.

 

'தியாகங்களுக்கஞ்சாத, விட்டுக்கொடாத போராட்டம் ஒன்றே ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளை வென்றெடுக்கக் கூடியது"

 

டானியலின் கட்டுரையின் பிரதான செய்திகளில் இது முதன்மை பெறுகிறது. அவர் கூறுவதுபோன்று 1966-78க்கிடையில் உள்ள காலத்தில் பெற்ற வெற்றிகள் அதற்கு முந்திய முப்பது ஆண்டு காலத்தில் பெற்றவற்றைவிட மிகத் தாக்கமானவை. இதற்கான விளக்கத்தை வெகுஜனப் பங்கு பற்றலைக் கொண்ட போராட்டத்திலேயே காண்கிறோம். அதேவேளை சாதியத்திற்கெதிரான நீண்ட வரலாற்றின் பல்வேறு கால கட்டங்களையோ பல்வேறு தனி நபர்கள் ஆற்றி பங்கினையோ டானியல் ஒதுக்கி விடவில்லை. அவருடைய வரலாற்றுப் பார்வை பல வகையில் முழுமையானது. அந்த முழுமையான வரைதலுக்கூடாகவே அவர் வெகுஜன அணிதிரட்டலின் அடிப்படையிலான போராட்டத்தின் விசேடத் தன்மையை இனம் காட்டுகிறார்.

 

டானியலின் இந்தக் கட்டுரை அவரது முழுப் பங்களிப்புடன் ஒப்பிடும்போது ஒரு சிறு அலகாகவே படும். ஆயினும் அதன் உள்ளடக்கம் கனதியானது என்பதை வாசகர் ஏற்றுக்கொள்வர். டானியலின் விமர்சன அணுகுமுறையில் மானுடவியல் நிறைந்திருப்பதைக் காண்கிறோம். அவருடைய நாவல்களை, குறுநாவல்களைப் படித்தவர்கள் இது டானியலின் அறிவின், ஆற்றலின் ஒரு சிறப்பம்சம் என்பதை ஏற்றுக்கொள்வர்.

 

இந்தக் கட்டுரை தற்போது பிரசுரமாவது புதிய விவாதங்களுக்கும் ஊக்கமளிக்கலாமென நம்புகிறேன்.

 

தீண்டாமைக்கெதிரான போராட்டம் ஏன் தொடரவில்லை?

 

அதைத் தொடர்ந்தும் தக்கவைக்க முடியாமைக்கு என்ன காரணங்கள்?

 

தமிழ்த்தேசிய விடுதலைப் போராட்டத்தின் ஆரம்பக் கட்டத்திற்கும், இந்தப் போராட்டத்திற்குமிடையே உறவு இருந்ததா? அப்படியானால் அது எத்தகையது?

 

தீண்டாமைக்கெதிரான வெகுஜனப் போராட்டத்தின் அரசியல் நெறிப்படுத்தல் எத்தகையது?

 

கம்யூனிஸ்ட் கட்சிக்குள் இது பற்றி விவாதங்கள் வேறுபாடுகள் இருந்தனவென்றால் அவை எவை? அவை எப்படிக் கையாளப்பட்டன?

 

தமிழ்த் தேசியப் போராட்டமும் அதைப் பீடித்துள்ள இராணுவவாதம், அது உருவாக்கிய துப்பாக்கிக் கலாச்சாரம் போன்றவை சாதி அமைப்பையும் அதற்கெதிரான போராட்ட மரபினையும் எப்படிப் பாதித்தன?

 

சைவ வேளாளியமெனும் கருத்தியலின் அது வைத்திருக்கும் விழுமியங்களின் இன்றைய நிலை என்ன?

 

இப்படிப் பல கேள்விகள் டானியலின் கட்டுரையை வாசிப்பவர் மனதில் தோன்றத்தான் போகின்றன.

 

---------------------------------------------------------------------------------------------------------------- 

 

கே. டானியல் (1979)

 

முக்கிய குறிப்பு:-

 

இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ள 1968ம் ஆண்டுக்கு முற்பட்ட சம்பவங்களும்,

இடம்பெறாத 1968க்கு பிற்பட்ட சம்பவங்களும் முறையே ”பஞ்சமர்” நாவலின் முதற் பாகத்திலும், தற்போது அச்சேறத் தயாராகவிருக்கும் இரண்டாம் பாகத்திலும் இடம் பெற்றுள்ளன. இக் கட்டுரை 1979இல் வெளியான வெகுஜன இயக்க மலரில் இடம்பெறாமல்

தணிக்கை சபையினால் தடுக்கப் பட்டதாகும்.       -கே.டானியல்-

 

1964ம் ஆண்டு காலத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் ஸ்தாபனங்களின் ஐக்கியத்தில் அச்சுவேலியில் நடந்த மாநாடும், அந்த மாநாட்டில் கலந்துகொண்டு ”ஆறுமாத காலத்துள் உங்கள் பிரச்சனைக்குத் தீர்வு காணப்படும்” என சாவகச்சேரி எம்.பி திரு வீ.என். நவரெத்தினம் அவர்கள் தந்த வாக்குறுதியும், காலஞ்சென்ற கோப்பாய் எம்.பி திரு.எஸ்.வன்னியசிங்கம் அவர்கள் 61இல் ஸ்ரான்லி பாடசாலை வட்டமேசை மாநாட்டில் தந்த வாக்குறுதியும் பற்றிய தாற்பரியங்களும் 1965இல் ஏற்படுத்தப்பட்ட ஐக்கிய இயக்கத்தினால் இணுவில் கந்தசாமி கோவிலில் இருந்து திருவாளர்கள்: நல்லையா, சுப்பிரமணியம் முதலானோர் தலைமை தாங்கி நடாத்தப்பட்ட - முற்றுமுழுதாகத் தாழ்த்தப்பட்ட மக்கைளையே கொண்ட - மௌன ஊர்வலமும் அத்தோடொத்த பல காரியங்களும், மீளாய்வு செய்யப்பட்டு, ”தியாகங்களுக்கஞ்சாத விட்டுக்கொடாத போராட்டம் ஒன்றே ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளை வென்றெடுக்கக்கூடியது” என்ற கொள்கையில் வெகுஜன இயக்கம் நெறிப்படுத்தப் பட்டது. இந்த நெறிப்படுத்தலின் அடிப்படையில் ஆலயப்பிரவேச இயக்கங்கள், தேனீர்க்கடைப் பிரவேசப் போராட்டங்கள் நாடெங்கும் விரிவடைந்தன. இந்தப் போராட்டங்கள் இழப்புக்கள் பலவற்றுக்கும் உட்பட்டதாயிற்று. ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமை இயக்கங்கள் காலத்தில் இந்த மக்களுக்கு ஒத்தாசையாக இருந்த தமிழ்த் தலைவர்களும், பிரமுகர்களும், தந்த ஆதரவுக்கு முற்றும் வேறுபட்ட விதத்தில் அப்போதைக்கப்போது உரிமைப்போர் நடந்த இடங்களுக்கு நேராகச் சென்று ஆலோசனை கூறியும், உற்சாகமளித்தும், இலங்கையின் சகல பகுதிகளிலும் ஒடுக்கப்பட்ட மக்களின் நிலைமைகளை விளங்கவைத்தும், சிங்கள சாதாரண மக்களின் அனுதாபத்தைப் பெற்றுத் தந்தும் இன்றுவரை தொடர்ச்சியாக வெகுஜன இயக்கத்தின் நடவடிக்கைகளை உற்சாகப்படுத்தியும் வரும் என்.சண்முகதாசன் அவர்கள் ஒடுக்கப்பட்ட மக்கள் மனதில் நிரந்தர இடத்தைப் பிடித்துக்கொண்டிருக்கும் அதேவேளை சாதி வெறியர்களுக்குச் சிம்ம சொற்பனமாகவும் இருக்கிறார் என்பது விசேஷமாகக் குறிப்பிடக் கூடியதாகும்.

 

66-78க்கிடையிலுள்ள காலப்பகுதியில் ஒடுக்கப்பட்ட மக்கள் பெற்றுக்கொண்ட வெற்றிகள் முன்னே காட்டப்பட்ட 30 ஆண்டுகால இயக்க வழியில் இந்தப் 12 ஆண்டு காலம் குறுகியதாயினும் இந்தக் குறிகிய காலத்திற் சாதிக்கப்பட்ட காரியங்கள்தான் விகிதத்தில் மிகமிகத் தாக்கமானதும், நிரந்தரமானதுமாகும். இந்தக் குறுகிய காலப் பலாபலன்களை அரைநூற்றாண்டு காலப் பலாபலன்களுடன் ஒப்பிடுவதில் கருத்துவேறுபாடு யாருக்குமே இருக்க முடியாது!

 

 

 

  சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த வெற்றிகள்!

 

மாவிட்டபுரம் கந்தன், மட்டுவில் பன்றித்தலைச்சி அம்பாள், செல்வச்சந்நிதி முருகன், வல்லிபுர ஆழ்வார் ஆகியவைகள் உட்படப் பல பகுதிகளின் ஆலயங்களின் கதவுகள் திறக்கப்பட்டதும், எவ்வளவு சரித்திரப் பிரசித்தி பெற்ற சம்பவங்களோ அதேயளவுக்குப் பிரசித்தி பெற்றவையே தேனீர்க்கடைகள், பொது நிலையங்கள் திறக்கப்பட்ட சம்பவங்களும், பொதுக் கிணறுகள் புழக்கத்துக்கு விடப்பட்ட செயலுமாகும்.

 

1968-78க்கிடையில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் யாவும் மக்கள் மனத்திற்கு வலிந்து கொண்டுவர வேண்டியதில்லை. ஏனெனில் இவை மிகச் சமீபத்திலே நடந்த 10ஆண்டுகாலச் சம்பவங்களாகும்.

 

அதற்காக ஒரு வரலாறு பிறக்க இருக்கிறது. அந்த வீர வரலாறு ஒடுக்கப்பட்ட மக்களின் பலநூறு சந்ததியினருக்கும் வழிகாட்டியாகவே நிற்கப்போகின்றது.

 

இந்த இடையில் சாதிக் கொடுமையின் வேள்வித் தீக்கு 11 ஒடுக்கப்பட்ட வீரர்கள் பலியிடப் பட்டனர். பொருட்சேதம், இரத்தசேதம் கணக்கிட முடியாதவை. இந்தத் தியாகங்கள் யாவும் ஒடுக்கப்பட்ட மக்களின் 50ஆண்டுகாலத் தியாகங்களைவிட மேலானவை என்பதற்குப் பின்னே வரும் ஒடுக்கப்பட்ட மக்களின் வரலாறு சான்றுகள் பகரும். இச்சிறு கட்டுரைக்குள் அவைகளை எல்லாம் அடக்க முடியாது.

 

இந்தப் பத்தாண்டு காலத்துள் ஒடுக்கப்பட்ட மக்களாலும், அதற்கு ஆதரவு தந்த சக்திகளாலும் சரித்திரப் பிரசித்தி பெற்ற கோவில்கள் நான்கு உட்படப் பலவும், தேனீர்ச் சாலைகளும், பொது நிலையங்களும் வெல்லப்பட்டன.

 

”தியாகங்களுக்கஞ்சாத விட்டுக்கொடாத போராட்டமே முடிவான விடுதலையைத் தரவல்லது” என்ற வழியில் முன்னேறிச் செல்லத் துடிக்கும் மக்கள் பரப்பில் மாற்றங்களை வரவேற்கும் சகலரும் இணைந்துகொள்ளக் கடமைப்பட்டவர்களாகின்றனர்.

 

 

பின்னணி (இங்கு சில பகுதிகள் காணாமல் போய்விட்டன)

 

அவ்வேளை இந்துக்கல்லூரி ஆசிரியராக இருந்த நெவின்ஸ் செல்லத்துரை அவர்களைத் தலைவராகவும், அமரர் ஜேக்கப் காந்தி அவர்களைச் செயலாளராகவும் கொண்டு உதயமாகிய ”ஒடுக்கப்பட்டோர் ஊழியர் சங்கத்திற்கு” மேலே குறிப்பிடப்பட்ட நால்வரும் போஷகர்களாக இருந்தமையிலிருந்து அன்று தொடக்கம் இன்றுவரை சாதி ஒழிப்புப் போராட்டத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள் மட்டும் தன்னந்தனியனாக நிற்கவில்லை என்பதும், காலத்துக்குக் காலம் நல்லெண்ணம் கொண்ட மக்கள் பலரும் ஒத்தாசை நல்கியுள்ளனர் என்பதும் புலனாகின்றது.

 

இந்தப் போஷகர்களில் மூவர் வெள்ளையர்கள் ஆதலால் அவர்கள் பிரதானப் படுத்தப் படவில்லையாயினும், உருத்திர கோடீஸ்வர ஐயரைப் பொறுத்தவரை அவர் சாதித் தமிழர்களின் கண்டனங்களுக்கும், எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கும் இலக்காக வேண்டியதாயிற்று. இதேபோல் இந்த ஸ்தாபனத்தின் யோவேல் போல் எண்ணற்ற எதிர்ப்புகளுக்கும் பயமுறுத்தல்களுக்கும் முகம் கொடுத்துப் பெருமையைச் சம்பாதிக்கத் தவறவில்லை.

 

1927ம் ஆண்டுக் காலகட்டத்தில் இலண்டனில் இருந்து தனது நண்பர் மூலமாக இலங்கைவாழ் ஒடுக்கப்பட்ட மக்களின் பிரச்சனைகளை, இலண்டனில் குடியேற்ற நாடுகளின் பிரச்சனைகளைக் கவனிக்கவென நிறுவப்பட்ட சபைக்குத் தெரிவித்ததில் அமரர் யோவேல் போல் அவர்கள் எடுத்த முயற்சியின் பலாபலனாக டொனமூரைத் தலைவராகக் கொண்டு இலங்கைக்கு வந்த அறுவர் அடங்கிய கமிஷனாகும். ”வயதுவந்தோருக்கு வாக்குரிமை அளித்தல்” என்ற கொள்கையின் கீழ் அன்று குடியேற்ற நாடுகளின் காரியதரிசியாக இருந்த அமெரி என்ற ஆ.P யினால் நியமிக்கப்பட்ட இந்த டொனமூர்க் கமிஷனுக்கு எதிர்ச் சாட்சியமளிக்க சேர்.பொன்னம்பலம் இராமநாதன் அவர்கள் இலண்டன் மாநகரம் சென்றதில் இருந்துதான், ”பஞ்சமச் சாதியிடம் வாக்குக் கேட்டுச் சாதிமான்கள் யாசகம் போவரோ?” என்ற கேள்வி சாதிமான்களிடையே ஆக்ரோஷமாக எழுந்து சாதி அடக்குமுறைகள் கோரவடிவங்களை எடுத்தன என்பது முக்கிய கவனத்துக்குரியதாகும். பின்னர் இங்கே வந்த டொனமூர் கமிஷன் ”வயது வந்தோருக்கு வாக்குரிமை” கிடைப்பதன் மூலம் பல உரிமைகளை அவர்கள் அடைய வழி பிறக்கும் என அறிக்கை மூலம் பிரகடனப் படுத்தியபோதும் உள்நாட்டு அரசு இயந்திரங்களைப் பெருஞ்சாதியினரே ஆளுகை நடத்தி வந்தமையால்- ஒடுக்கப்பட்ட மக்களால் எதிர் பார்க்கப்பட்டவைகள் நடந்தேறவில்லை. பதிலுக்கு அடக்குமுறைகள் அதிகரித்தன. விதானை, உடையார், மணியகாரன் என்ற பதவிகளில் குந்தியிருந்தவர்கள், காவல்ப் படையினைச் சேர்ந்தவர்கள், சிவில்சேவை அதிகாரம் வகித்தவர்கள் உட்பட சகல பிரிவினரும் தேசவழமைச் சட்டத்தின் அடிப்படையில் துரித கதியில் செயற்படத் தொடங்கினர். இவைகளைத் தாக்குப் பிடிக்க முடியாத ஒடுக்கப்பட்ட மக்கள் மதமாற்றம் போன்ற குறுக்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தொடங்கினர். இதனால் ஒருசில சிறிய அளவிலான மாற்றங்கள் ஏற்படத் தொடங்கின என்பது உண்மையே.

 

அந்தக் காலத்துத் திண்ணைப் பள்ளிகளுக்குக்கூட அனுமதி கிடைக்கப்பெறாத மக்களுக்குப் பிற மதப் பாடசாலைகள் சற்று வழி விட்டன. சுற்றுச்சார்புகளை மீறிப் பாடசாலைகளுக்குச் சென்ற பலர் தண்டிக்கப்பட்டனர், இம்சிக்கப் பட்டனர்.

 

பகிரங்க வீதிகளில் தலைநிமிர்ந்து நடமாடத் தடை- சுடலைகளில் பிணம் சுடத் தடை- பொது ஸ்தாபனங்களில் உள்நுழையத் தடை- சுதந்திரமான வாகனப் போக்குவரத்துக்குத் தடை- கோவிற்பக்கம் செல்லத் தடை- மேளம் அடிக்கத் தடை- மீசை விடத் தடை- கடுக்கன் அணியத் தடை- குளங்களில் குளிக்கத் தடை- பந்தல் போட்டு வெள்ளை கட்டத் தடை- முளங்கால் மட்டத்திற்குக்கீழ் வேட்டியணியவும், மேலங்கி அணியவும், சால்வை போடவும் தடை- வண்டில் ஆசனத்தட்டில் ஏறியிருக்கத் தடை- புகைவண்டியின் ஆசனங்களில், பஸ் ஆசனங்களில் இருக்கத் தடை- கடை போன்றவை வைக்கத் தடை- செய்த வேலைக்குக் கூலி கேட்கத் தடை- குழந்தைகளுக்கு நல்ல பெயரிடத் தடை- பால்மாடு வளர்க்கத் தடை- விறுமர், அண்ணமார், காளி, பெரிய தம்பிரான், வீரபத்திரர், வைரவர், நாச்சிமார், காத்தவராயர் ஆகிய தெய்வங்களின் பெயர்களைவிட ஏனைய பெயர்களில் கோவில்கள் அமைக்கத் தடை- குடை பிடிக்கவும், வெள்ளை வேட்டி அணியவும், செருப்பு அணியவும், பெண்கள் குடுமி போட்டுக்கொள்ளவும் தடை- தாவணி போடத் தடை, தங்கத்தாலி, நகை நட்டுக்கள் அணியத் தடை- இப்படித் தடை வரிசையோ கணக்கற்றவை. இவை யாவும் தேசவழமை என்ற மதிப்பீட்டுக்கு உட்பட்டவையாகவே கணிக்கப் பட்டன.

 

சர்வசன வாக்குரிமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முறையில் இராமநாதன் துரை அவர்கள் இலண்டன் சென்றிருந்தபோது அவரைத் தலைவராகக் கொண்டிருந்த சைவ சித்தாந்த சபைக்குத் தற்காலிகத் தலைவராக, ஆறுமுகநாவலரின் மருமகனாகிய த.கைலாசபிள்ளை அவர்கள் நியமிக்கப் பட்டிருந்தார்கள். அப்போது பரமேஸ்வராக் கல்லூரியில் சைவ சித்தாந்த அறக்கல்விப் போதனைக்காக மாநாடு ஒன்று நடத்தப்பட்டது. அப்போது திரு.யோவேல் போல் அவர்களால் உந்தப்பட்ட சுன்னாகத்தைச் சேர்ந்த ஒடுக்கப்பட்டோர் சிலர், தாமும் சைவ சித்தாந்த அறக்கல்வியைப் பெறவேண்டும் என்று கோரி, மாநாட்டு மண்டபத்துக்குள் நுழைய முற்பட்டபோது, ”நிரந்தரத் தலைவர் இல்லாதபோது இதை அனுமதிக்க முடியாது” என மாநாட்டுத் தலைவர் கைலாயபிள்ளை மறுக்கவே, அறக்கல்விக்கு அனுமதி கேட்டுப் போயிருந்த ஒடுக்கப் பட்டோர் அவரின் மறுப்பை எழுத்தில் பெற்று, டொனமூர்க் கமிஷனுக்கு தந்திமூலம் இலண்டனுக்கு அனுப்பி வைத்தனர். அந்த வேளையும் உயர்சாதியைச் சேர்ந்த நாகநாதி அதிகாரம், இலங்கைச் சட்டசபை உறுப்பினராக இலண்டனிலிருந்த தம்பிமுத்து ஆகியோர் இந்த மக்களுக்கு ஆதரவாய் இருந்தனர். நம்மவர் துணிந்து செயற்பட்டமையால்த்தான் இராமநாதன் துரை அவர்களின் இலண்டன் பிரயாணம் தோல்வியில் முடிந்ததெனலாம்.

 

1930ம் ஆண்டுக்காலப் பகுதியில் கண்டி எச்.பேரின்பநாயகத்தைத் தலைவராகவும், செனட்டர் நாகலிங்கம், ஓறேற்றர் சுப்பிரமணியம், கலைப்புலவர் நவரெத்தினம், ஏ.எஸ்.கனகரெத்தினம் ஆகிய முக்கியஸ்தர்கள் உட்பட ஒடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளையும் உள்ளடக்கிய இளைஞர் காங்கிரஸ் என்ற ஸ்தாபனம் தோன்றியது.

 

இந்த ஸ்தாபனம் பல தேசியப் பிரச்சனைகளைக் கொண்டிருந்தபோதும், சாதி ஒழிப்பு விவகாரத்தில் பெருமளவு செயற்பட்டு, ”சம ஆசனம்- சம போசனம்” என்ற கொள்கையை ஏற்று நாடெங்கும் பிரச்சாரங்களில் ஈடுபட்டது. அப்போது இவர்களுக்குச் சாதிமான்களால் கிடைத்த எதிர்ப்புகள் பெருமளவாகும். இதன் பிரச்சாரத்துக்கென தமிழகத் தமிழறிஞர் திரு வி.க அவர்கள் அழைக்கப்பட்டு, சமபந்தி, சமபோசனப் பிரசாரத்தில் ஈடுபடுத்தப் பட்டதும் அவர் திரும்பிப்போன மறுகணமே அவர் பேசிச் சென்றதும், சம ஆசன நடவடிக்கையில் ஈடுபடுத்தப் பட்டதுமான பல பாடசாலைகள் தீயிட்டு எரிக்கப்பட்டன. வசாவிளான் வடமூலை, ஒட்டகப்புலம், சுழிபுரம், புன்னாலைக்கட்டுவன், காங்கேசன்துறை, பருத்தித்துறை ஆகிய இடங்களில் சுமார் 14பாடசாலைகள் சாதிவெறியர்கள் வைத்த தீயில் எரிந்து சாம்பராகின.

 

1931இல் வரவிருந்த ஆட்சிமன்றத் தேர்தலைத் தமிழர்களின் உரிமைக்காகப் பகிஷ்கரிக்கத் திட்டமிட்டுப் பிரசாரம் செய்துவந்த வாலிபர் க